கோவை: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய மத்திய பாரதிய ஜனதா மற்றும் அதற்கு துணைபோகும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும், உடனே விலை குறைப்பு செய்யவலியுறுத்தியும், கலால் வரியை ரத்து செய்து விலை குறைப்பு நடவடிக்கையை மத்திய பா.ஜ.க.அரசு உடனடியாக மேற்கொண்டு மக்களின் இன்னல்களைப் போக்க முன்வர வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா (எ) கிருஷ்ணன், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சேனாதிபதி ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்த்திய பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகளைக் கண்டித்தும், உடனே விலை குறைப்பு செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் மத்திய அரசுடன் மாநில அரசு சேர்ந்துகொண்டு மக்களது அடிப்படைத் தேவைகளை உணராமல் கண்டும் காணாமல் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளான பெட்ரோல், டீசல் விலை மற்றும் கேஸ் விலைஉயர்வை உடனடியாக மத்திய-மாநில அரசுகள் திரும்பப்பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகரம், பகுதி, ஒன்றியம், வட்டம், பேரூர் பொறுப்பாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மூத்த முன்னோடிகள், அனைத்து நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள், பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி எங்கு பார்த்தாலும் தி.மு.க. கட்சிக் கொடிகள் தென்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்தப்பகுதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.