திருப்பூர்: மூன்றே மாதத்தில் குறுக்குவழியில் முதல்வராக நினைத்த ஸ்டாலின் கனவை தகர்த்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவதற்கும், ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இணைப்புக்கும் பக்கபலமாக இருந்ததால் என்னையும், தங்கமணியையும் ஸ்டாலின் தொடர்ந்து குறைகூறி வருகிறார் என்று திருப்பூரில் தொண்டர்கள் மத்தியில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறினார்.
திருப்பூர்: மூன்றே மாதத்தில் குறுக்குவழியில் முதல்வராக நினைத்த ஸ்டாலின் கனவை தகர்த்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவதற்கும், ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இணைப்புக்கும் பக்கபலமாக இருந்ததால் என்னையும், தங்கமணியையும் ஸ்டாலின் தொடர்ந்து குறைகூறி வருகிறார் என்று திருப்பூரில் தொண்டர்கள் மத்தியில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. புதிய அலுவலகம் காங்கேயம் சாலையில் திறக்கப்பட்டது. கோவை, திருப்பூர், நீலகிரி, மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகளைக்கூறி வருகிறது. தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் அமெரிக்காவின் கஜானாவே போதாது. மேலும் 2016 - 17 ஆம் ஆண்டுக்குப் பிறகே தன் மீதும் அமைச்சர் தங்கமணி மீதும் தொடர்ந்து ஊழல் புகாரை கூறி வருகிறார்கள். அதற்குக் காரணம் மூன்றே மாதத்தில் குறுக்கு வழியில் முதல்வராக நினைத்த ஸ்டாலின் கனவை தகர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முதல்வராக நீடிப்பதுடன் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இணைந்ததற்கு பக்கபலமாகவும் நாங்கள் இருக்கிறோம். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைக்க உழைத்ததற்காகவும் எங்கள்மீது கோபத்தில் ஸ்டாலின் பொய்யான ஊழல் புகார்களை கூறி வருகிறார்.
மேலும் ஸ்டாலின் துணை முதல்வராகவும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்து இதுவரை தமிழகத்துக்கு எந்த ஒரு சாதனையையும் செய்யாத நிலையில் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்து இதுவரை மத்திய அரசிடமிருந்து 143 விருதுகளை பெற்றிருக்கிறேன். மீண்டும் வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக வருவார். அதற்காக நாம் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக பணியாற்றவேண்டும். நமக்கு எதிரி தி.மு.க. என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.