கோவை: கோவை தடாகம் பகுதியில் செம்மண் திருடியதை தட்டிக்கேட்டதற்கு, செங்கல் சூளை அதிபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை தடாகம் பகுதியில் செம்மண் திருடியதை தட்டிக்கேட்டதற்கு, செங்கல் சூளை அதிபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அடிவாங்கியவர்கள் எங்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது, என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி இருக்கும் தடாகம் பள்ளத்தாக்கில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. அதில், பல செங்கல் சூளைகள் மாசுகட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை, வருவாய்த்துறை, கனிம வளத்துறை, மலைதள பாதுகாப்பு மற்றும் திட்டக்குழுமம், வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக, கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. இதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் கனிம வள கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டங்களை அமுல்படுத்த உத்தரவிட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் செம்மண் கொள்ளையில் ஈடுபட்ட நான்கு டிப்பர் லாரிகளை வட்டாட்சியர் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இன்னமும் அந்த பகுதிகளில் மணல் கொள்ளை தங்குதடையின்றி நடைபெற்று வருவதாக, குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மண் எடுக்காமல் இருந்த செங்கல் சூளை உரிமையாளர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் 350 முதல் 400 டிப்பர் லாரிகளில் மண் எடுத்து வருகின்றனர், என தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து ஜனவரி 5 ஆம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சமூக ஆர்வலர்கள், மலைவாழ் மக்கள் சங்கத்தினர், விவசாய மற்றும் பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
இந்நிலையில், இன்று மதியம் சின்னத்தடாகம் கிராமத்தில் மகேஸ்வரி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் செம்மண் திருடிய டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி, வடக்கு வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், ஆட்சியர் ஆகியோருக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் தகவல் கொடுத்தனர். ஆனால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனத் தெரிகிறது.
இதற்கிடையே, அங்கு வந்த 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக வழக்கு தொடுத்த கணேஷ், என்ற சமூக ஆர்வலர் மற்றும் அவருடன் வந்த மாணிக்கராஜ், சமூக ஆர்வலர்கள் மற்றும் நில உரிமையாளர் மகேஷ்வரி ஆகியோரைத் தாக்கியதாக புகார் தெரிவிக்கின்றனர்.
அப்போது, சமூக ஆர்வலர்கள் தாக்கப்படும்போது வந்த தடாகம் உதவி ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், அதிகாரிகள் ஆகியோர் அவர்களை தடுக்காமல் இருந்ததாகக் குற்றம் சும்மதியுள்ளனர். மேலும், தடாகம் காவல் நிலையத்துக்குச் சென்ற மாணிக்கராஜ், பரமேஸ்வரன் ஆகியோரை அங்கு கூடியிருந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் தடாகம் துணை காவல் நிலையம் முன்பு வைத்தே கடுமையாகத் தாக்கியுள்ளனர், என்றும் தெரிவித்தனர். மேலும், காவல்துறையினர் அவர்களைத் தடுத்து தாக்குதலுக்குள்ளான இருவரையும் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்ததாகக் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், செங்கல் சூளை உரிமையாளர்கள் தங்களிடம் பணிபுரியும் வட இந்திய தொழிலாளர்களை கூட்டி வந்து, லாரி ஓட்டுநரைத் தாக்கியதாகக்கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமூக ஆர்வலர்களைத் தாக்கிய செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அடிவாங்கியவர்கள் மீதே காவல்துறை வழக்கு பதிந்துள்ளது, என தெரிவித்த அவர்கள் கோவையிலுள்ள அரசு அதிகாரிகள் கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களைப் பிடித்தும் வழக்கு பதிவு செய்யாமல் விட்டதன் விளைவாகவே சமூக ஆர்வலர்கள் தாக்கப்பட்டுள்ளனர், என்று தெரிவிக்கின்றனர்.
கனிம வள கொள்ளைக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்டால்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.