கோவை: கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதிக்காத போலீசைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதிக்காத போலீசைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தி.மு.க. சார்பில் கோவையில் வார்டுதோறும் வார்டுசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதற்கு கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்து, மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதிக்காத மாநகர காவல்துறையைக் கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாநகர காவல் ஆணையாளர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. தி.மு.க எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் அண்ணாசிலையில் இருந்து ஊர்வலமாக வந்த தி.மு.க.வினரை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாக காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
செஞ்சிலுவைச் சங்கம் முன்பாக இரண்டு அடுக்குகளாக காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி தி.மு.க.வினரை தடுத்தனர்.
அப்போது போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அ.தி.மு.க.வினர் விதிகளை மீறி நடத்தும் கூட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும் காவல்துறையினர் தி.மு.க.வினருக்கு மட்டும் அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். போராட்டம் காரணமாக செஞ்சிலுவைச் சங்கம் முன்பாக அரை மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.