கோவை: அதிமுக- பாஜக இடையே எவ்வித குழப்பமும் இல்லை எனவும் பல நேரங்களில் அதிமுக பாஜகவிற்கு உதவியாக இருந்துள்ளது என்று பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை: அதிமுக- பாஜக இடையே எவ்வித குழப்பமும் இல்லை எனவும் பல நேரங்களில் அதிமுக பாஜகவிற்கு உதவியாக இருந்துள்ளது என்று பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜக மண்டல அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கவுண்டம்பாளையம் மண்டல தலைவர் வினோ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை அலுவலகத்தைத் திறந்து வைத்து அங்கிருந்த தலைவர்கள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக பாஜக இடையேயான உறவில் எவ்வித குழப்பமும் இன்றி நன்றாக உள்ளது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை சிறப்பாக ஒருங்கிணைத்துச் செல்கிறார் என்றார்.
தமிழகத்தில் மூன்றாவது அணி வந்தாலும் பாஜகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளது என்று கூறிய அவர், அதிமுக பாஜகவுக்கு பல நேரங்களில் உறுதுணையாக இருந்திருப்பதாகவும் கூட்டணி தர்மத்தின் படி அதிமுக பாஜக உள்ளதால் எந்த குழப்பமும் கிடையாது என்று தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, எம்ஜிஆர் ஒரு மாபெரும் தலைவர், அவரை பாஜக கௌரவமாகப் பார்க்கிறது என்றார்.
மேலும் சீமானுக்கு கட்சி ரீதியாக அதிமுகவினர் பதில் கூறி விட்டனர் எனவும் குறிப்பிட்டார். இதேபோல் இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் ஆரோக்கியமாக இருக்கும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மண்டல செயலாளர் நந்தகுமார், செயற்குழு உறுப்பினர் மைதிலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.