திருப்பூர்: தமிழகத்தை பொறுத்த வரை யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் அதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூர்: தமிழகத்தைப் பொறுத்த வரை யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் அதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை எனவும் மக்களுக்கு உழைப்பதே எங்களது பணி, அந்த பணிக்கு ஏற்ற ஊதியத்தை மக்கள் நிச்சயம் வழங்குவார்கள் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதிமுக கட்சியில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பல்லடம், மங்கலம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக பதவியேற்றுக்கொண்டார்.
பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எம் எஸ் எம் ஆனந்தன் முன்னாள் பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் வி.ஸ்.காளிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராதாகிருஷ்ணன், பல்லடம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது எனவும் இங்கு 4 லட்சம் வாக்குகள் உள்ளதாக தெரிவித்தார். மேலும், சட்டமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டியில் 25 முதல் 45 பேரை நியமிக்க வேண்டுமெனவும் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.
வருகின்ற ஐந்தாம் தேதி அம்மா நினைவு நாளில் தொகுதி முழுவதும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உருவப் படத்தை வைத்து வழிபட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் புதிய வாக்காளர்களை கட்சி நிர்வாகிகள் சேர்க்க வேண்டும் எனவும், நமது வாக்குகளை சிதறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், அதுமட்டுமின்றி கட்சி தொண்டர்கள் தங்களது சொந்தப் பிரச்சனைகளையும் தன்னிடம் தெரிவிக்கலாம் எனவும் அதற்கு உரிய தீர்வு காணப்படும் எனவும் வருகின்ற நாட்களில் பல்லடம் உடுமலை தொகுதிகளில் அனைத்து கட்சி நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.