கோவை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்குள் போலீஸ் தடையை மீறி நுழைந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்குள் போலீஸ் தடையை மீறி நுழைந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிடக் கூடும் என்பதால் 200 மீட்டர் முன்பாகவே காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென அருகில் இருந்த பி.எஸ்.என்.எல் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்ற போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, காவல்துறையினரின் தடையை மீறி பிஎஸ்என்எல் அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தரையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும், வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியில் அழைத்து வந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் மற்றும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.