கோவை: இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தை சீர்குலைக்கும் பாஜக அரசு முயற்சியை கண்டித்து திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தை சீர்குலைக்கும் பாஜக அரசு முயற்சியை கண்டித்து திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த இரு தினங்களுக்கு முன் மத்திய அரசு இந்திய கலாச்சார ஆய்வுக்குழு ஒன்றை நியமித்தது. அதில் அதிகப்படியாக பிராமணர்கள் மட்டுமே இருப்பதாகவும், தலித் போன்ற ஜாதியினர் யாருமில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், இதனை கண்டித்து கோவையில் திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசு தற்போது நியமித்துள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை கலக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு, ஒற்றைக்கலாச்சாரம் என்கிற ஆர்எஸ்எஸ் திட்டத்தினை நடைமுறைப்படுத்த பாஜக மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, இந்திய பண்பாட்டின் தோற்றம், பரிமாணம் குறித்து இவர்கள் அமைத்த குழு என்பது தெளிவாகிறது.
எனவே, உடனடியாக இந்த குழுவை கலைக்க வேண்டும் எனவும் இதனை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், மத்திய அரசு 12 ஆயிரம் ஆண்டு கால இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த கலாச்சார ஆய்வுக் குழுவில் மத்திய அரசு செம்மொழி என்று அங்கீகரித்த தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளின் ஆய்வாளர்கள், பெண்கள், பல மொழிகள் பேசக் கூடிய மக்கள், பல தேசிய இனங்கள், பழங்குடிகள், சிறுபான்மையின மக்கள், ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்கள் என பல சமயங்களின் பிரதிநிதிகள் யாருக்கும் இடமளிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து முழக்கங்களை எழுப்பி வந்த அவர்கள், பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்தும் தடைபட்டது.