கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணையிலிருந்து 9 மதகுகள் வழியாக இன்று மீண்டும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணையிலிருந்து 9 மதகுகள் வழியாக இன்று மீண்டும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடர் மழையால், ஆழியார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர் ஆழியாறு, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் கடந்த 20ம் தேதி அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியதையடுத்து, அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக, 3,625 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 119.55 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,408 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மதியம் 2 மணி அளவில் அணைக்கு நீர்வரத்து திடீரென உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 119.70 அடியை எட்டியது. பாதுகாப்பு கருதி 9 மதகுகள் வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர் வரத்தைப் பொறுத்து, உபரி நீர் வெளியேற்றம் குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.