கோவை: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி ஊராட்சியில், வெளி நபர்கள் தலையிட்டு இடையூறு ஏற்படுத்துவதாகவும், இதை தடுத்து நிறுத்த கோரியும் இன்று 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 3 பெண் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி ஊராட்சியில், வெளி நபர்கள் தலையிட்டு இடையூறு ஏற்படுத்துவதாகவும், இதை தடுத்து நிறுத்த கோரியும் இன்று 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 3 பெண் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் ஈஸ்வரி (48), சோபியா (40), விஜயலட்சுமி (35) ஆகியோர் கூறியதாவது:
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் மாக்கினாம்பட்டி ஊராட்சியில் 3ம் வார்டு, 4ம் வார்டு மற்றும் 5 ம் வார்டுகளில் ஊராட்சிமன்ற உறுப்பினர்களாக, பெண் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். கடந்த 5 மாதங்களாக இந்த 3 வார்டுகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட எந்த ஊராட்சி பணிகள் குறித்து வார்டு உறுப்பினர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் தகவல் தெரிவிப்பது இல்லை.
தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள் மட்டுமே அவர்களது வார்டுகளில் ஊராட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும். ஊராட்சி பணிகளில் வேறு நபர்கள் தலையிடுவதை தடை செய்ய வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆலோசனைப்படி, இது குறித்து ஊராட்சிமன்ற கூட்டத்தில் முறையிட்டும் பலன் இல்லை.
மேலும், இந்திரா நகர் பகுதியில் சாக்கடை வசதி, குப்பை அகற்றுதல், கருப்பராயன் நகர் 5ம் வீதி பகுதியில் கடந்த 8 மாதங்களாக குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி ஆகியன செய்து தரப்படவில்லை. ஊராட்சி பணிகளில் வெளிநபர்கள் தலையீட்டை தடுக்க வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர்.
பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பின்னர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.