கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மகப்பேறு பிரிவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 324 கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மகப்பேறு பிரிவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 324 கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் 21 ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக மார்ச் மாதம் முதல் கோவை, திருப்பூர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரோனா தொற்று உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மகளிர் சம்பந்தமான நோய் உள்ள பெண்கள் இங்கு தான் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் இம்மருத்துவமனையில் கொரோனா தொற்று உள்ள கா்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் பிரத்யேகமாக பிரசவ வார்டும், அறுவை சிகிக்சை அரங்கமும் தயார்ப்படுத்தப்பட்டது.
இம்மருத்துவமனையில் மகளிர் மற்றும் மகப்பேறு பிரிவில் இதுவரை 409 மகப்பேறு மற்றும் மகளிர் நோய் உள்ள கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதேபோல, இம்மருத்துவமனையில் 105 கர்ப்பிணிகளுக்கு சிறந்த முறையில் பிரசவம் பார்க்கப்பட்டது. 7 பெண்களுக்கு சுகப்பிரசவமும், 98 பெண்களுக்கு சிசேரியன் முறையின் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது.
மேலும், இங்கு 76 தாய்மார்களுக்கு, வெளி மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு கொரோனா தொற்றின் காரணமாக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 31 தாய்மார்களுக்கு பேறுகால சிக்கலான பிரச்சனைகளும் கொரோனா தொற்றின் காரணமாக நுரையீரல் பாதிப்புகளும் இருந்தது. அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் சிறந்த முறையில் அளிக்கப்பட்டது. இதில் 70 தாய்மார்கள் சிகிச்சை முடிந்து நல்லமுறையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதேபோல, இம்மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு பிறந்த அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 4 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமானவுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து மருத்துவமனை முதல்வர் நிர்மலா பேசுகையில், "இஎஸ்ஐ மருத்துவமனை மகப்பேறு பிரிவில் 324 கொரோனா தொற்று உள்ள கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 197 கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை வியாதி, இரத்தகொதிப்பு, இரத்த சோகை, வலிப்பு வியாதி, இருதய நோய் மற்றும் முந்தைய அறுவை சிகிச்சை போன்ற சிக்கலான பிரச்சனைகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது," இவ்வாறு அவர் கூறினார்.