கேரள தங்க கடத்தல் விவகாரம்: கோவையில் தங்க நகை பட்டறையில் என்ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை.
கோவை: ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சம்பவம் தொடர்பாக, கோவை கருப்ப கவுண்டர் வீதி அருகில் உள்ள நகை பட்டறை உரிமையாளருக்கு ஏதேனும், தொடர்புள்ளதா? என்றசந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரது வீடு மற்றும் நகை பட்டறையில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது குறித்து, சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடத்தலுக்கு பின்னணியாக, தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய, ஸ்வப்னா சுரேஷ் என்பவர் செயல்பட்டது, விசாரணையில் வெளிவந்தது. இதனையடுத்து, அவர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதுவரை, ரூ.100 கோடி தங்கம் கடத்தப்பட்டு இருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், என்.ஐ.ஏ அதிகாரிகள், இந்த வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஸ்வப்னா சுரேஷ் திருச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு, நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், அவர் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை கருப்ப கவுண்டர் வீதி அருகில் உள்ள பவிழம் வீதியில் வசித்து வரும் நகை பட்டறை உரிமையாளர்
நந்தகோபால் என்பவருக்கு இந்த வழக்கில் தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரிகள், இன்று அவரது வீடு மற்றும் நகை பட்டறையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
டிஎஸ்பி சாகுல் அமீது தலைமையிலான நான்கு பேர் கொண்டஅதிகாரிகள் குழுவினர், இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், கேரளாவிலிருந்து நந்தகோபாலின் நகை பட்டறைக்கு தங்கம் கை மாற்றப்பட்டதா? விற்கப்பட்டதா? அல்லது ஆபரணங்கள் செய்து மீண்டும் கேரளாவுக்கு அனுப்பப்பட்டதா? என்ற கோணங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
கோவை கருப்ப கவுண்டர் வீதியில் உள்ள நந்தகோபாலின் வீடு மேல் மாடியிலும், தரைத்தளத்தில் பட்டறை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.