கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில், தி.மு.க மாவட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில், தி.மு.க மாவட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கோவை மாவட்டத்தில் 17 மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 5 கவுன்சிலர்கள் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள் ஆவர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் அலுவலகம் உள்ளது. இங்கு மாவட்ட கவுன்சிலர்களுக்கான மாதாந்திர ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர், சாந்திமதி தலைமையில் நடைபெற்றது.
இதில், தி.மு.கவை சேர்ந்த கவுன்சிலர்கள் கார்த்திக், ரம்யாகுமாரி கருணாகரன், வளர்மதி கார்த்திகேயன் மற்றும் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த ராதாமணி கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, ஊராட்சித்துறை அதிகாரிகள் மதிப்பதில்லை, உரிய நிதி ஒதுக்கப்படுவதில்லை எனக்கூறி தி.மு.க கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், தி.மு.க கவுன்சிலர் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில்:
மாவட்ட ஊராட்சி அதிகாரிகள் தி.மு.க கவுன்சிலர்களை மதிப்பதில்லை கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் கலந்துகொள்வதில்லை. ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கு கீழே சுமார் 8 முதல் 9 பஞ்சாயத்துகள் மற்றும் 55 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற வசதிகளை செய்து தரக்கூட போதுமான நிதி ஒதுக்கப்படுதில்லை.
இதுகுறித்து, மூன்று முறை நடந்த கூட்டத்தில் எடுத்துக்கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனை, கண்டித்து தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். இந்நிலை, தொடர்ந்தால் அடுத்த கூட்டத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.