திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் இருந்து 38 குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் இருந்து 38 குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் உள்ள ஆலத்தூர் என்ற இடத்தில் தனியார் நூற்பாலைக்குச் சொந்தமான தொழிற்சாலையில் இருந்து 38 குழந்தை தொழிலாளர்களை கடந்த மாதம் 29ம் தேதி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையினர் மீட்டனர்.
கடந்த மாதம் 24ம் தேதி தனியார் நூற்பாலையில் குழந்தை தொழிலாளர்கள் அதிகப்படியாக வேலை செய்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் குழந்தைகள் பாதுகாப்பு துறையினர், அந்த நூற்பாலையில் ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில், அந்த நூற்பாலையில் வேலை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் என 38 குழந்தை தொழிலாளர்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் மீட்ட நிலையில், இன்று அந்த 38 பேரையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சென்ற அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேருந்து வசதியும், உணவும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.
மேலும் குழந்தை தொழிலாளர்களை வைத்து பணி செய்ய வைத்த ஆலத்தூர் பகுதியில் இருக்கக்கூடிய தனியார் நூற்பாலை தொழிற்சாலையின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பூர் மாவட்டத்தில் இதுபோன்று குழந்தை தொழிலாளர்களை பணி செய்ய வைக்கும் நிகழ்வு இனிமேல் நடக்கக்கூடாது என்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.