கோவை: கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் முண்டாசு கட்டி நூதன முறையில் விவசாயிகள் மனு அளித்தனர்.
கோவை: தமிழக கூட்டுறவு சங்கங்களின் நகர்புற வங்கிகளை மத்திய அரசு கையகப்படுத்தினால் அது மாநில அரசின் நிதி ஆதாரத்தை அபகரிக்கும் செயல் எனக்கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் முண்டாசு கட்டி நூதன முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
இது தொடர்பாக விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக மக்களின் மூலதனத்துடன் தனியாக துணை விதிகள் உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் நகர்ப்புற வங்கிகளை மத்திய அரசு கையகப்படுத்தும் என்ற அறிவிப்பு மாநில அரசின் நிதி ஆதாரத்தை அபகரிக்கும் அறிவிப்பு ஆகும்.
கூட்டுறவு வங்கிகளின் மூலதனம் அதன் உறுப்பினர்கள் மூலம் உருவாக்கப்பட்டது. பொதுமக்கள் பங்களிப்பில் உருவான வங்கிகளை மத்திய அரசு கையகப்படுத்தும் அறிவிப்பு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் துணை விதிகளுக்கு எதிரானதாகும்.
குறிப்பாக விவசாயிகளின் மூலதனம் மற்றும் பங்குகள், எவ்வித அறிவிப்பும் கருத்து கேட்புமின்றி மத்திய அரசால் அபகரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.
அதே போல், அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டத்திருத்தம், வேளாண்மை விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல் அவசர சட்டம், விவசாயிகளின் விளை பொருட்களுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் போன்ற சட்டங்களால் கார்ப்ரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து விளை பொருட்களை பதுக்கவும், அதிக விலைக்கு விற்கவும் வழிவகுக்கும். இதனை இந்தியாவில் நடைமுறைப்படுத்தக்கூடாது. இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.