கோவை: கோவையில் வழி தெரியாமல் தவித்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆதிவாசியை பராமரித்து அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த காளிபாளையம் நண்பர்கள் நற்பணி குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை: கோவையில் வழி தெரியாமல் தவித்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆதிவாசியை பராமரித்து அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த காளிபாளையம் நண்பர்கள் நற்பணி குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ளது காளிபாளையம் கிராமம். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஸ்ரீராம் என்பவரது வீட்டில் 20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் புகுந்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து உள்ளார்.
ஸ்ரீ ராமின் வீட்டிற்குள் மர்ம நபர் புகுந்த விஷயம் ஊர் முழுவதும் பரவ அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் அங்கு வந்து வீட்டினுள் நுழைந்த நபர் குறித்து விசாரணை செய்துள்ளனர். இதில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, நற்பணி மன்ற நிர்வாகி அன்புசெல்வன் என்பவர் அந்த நபரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று 3 நாட்களாக தங்க வைத்து அவருக்கு உணவளித்து, பராமரித்து வந்துள்ளார். மேலும், அந்த நபருக்கு முடிவெட்டி குளிப்பாட்டி தனது துணிகளை கொடுத்துள்ளார். மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் ”இதுதான் என் வீடு, என் ஆடுகளை காணோம், நான் நேற்று நல்லா தூங்கிட்டேன்” என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்துள்ளார்.
பின்னர் தன் ஊர் தாளமுக்கி என்றும் கோத்தகிரி என்றும் கூறியதை தொடர்ந்து அன்புசெல்வன் தனக்கு தெரிந்த நபர் மூலம் நீலகிரி ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர் நலச்சங்கத்தினரிடம் தொடர்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்தார். இதில் அந்த நபர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள தாளமுக்கி மலை கிராமத்தை சேர்ந்த காரமடை என்பவரின் 20 வயதான மகன் ராமு என்பது தெரியவந்தது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டார் என்றும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, நீலகிரி ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர் நலச்சங்கத்தினர் காளிபாளையம் வந்து நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகி அன்புசெல்வன் வீட்டில் பராமரிப்பில் இருந்த ராமுவை அழைத்துச் சென்றனர். பின்னர் கோத்தகிரியில் உள்ள ராமுவின் பெற்றோரிடம் அவரை சேர்த்தனர். ராமுவின் உறவினர்கள் அன்புசெல்வனுக்கு அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தங்களது நன்றியை தெரிவித்தனர்.