கோவை: கோவையில் ரோட்டில் வேல் வரைந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினரின் விசாரனையை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில இணைச்செயலாளர் அமர்நாத் சிவலிங்கம் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவையில் ரோட்டில் வேல் வரைந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினரின் விசாரனையை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில இணைச்செயலாளர் அமர்நாத் சிவலிங்கம் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை குனியமுத்தூர் அருகே கந்த சஷ்டி கவசம் மற்றும் இந்து கடவுள் முருகனை அவமதிக்கும் வகையில் கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் வீடியோ வெளியிட்டதாக எதிர்ப்பு இந்து அமைப்பினர் பல்வேறு வகையிலான போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், ஊரடங்கை மீறி கோவை குனியமுத்தூர் பகுதியில் நேற்று ரோட்டில் வேல் வரைந்தாக 5 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கண்டித்து இந்து அமைப்பினர் குனியமுத்தூர் காவல் நிலையத்தை இன்று முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் நேற்று சாலைகளில் வேல் வரைந்ததாக பி.கே புதூர், பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த அக்ஷயவர்மா, குருபரன், சந்தோஷ், அருண்குமார், சிவகணேஷ் ஆகியோரை பிடித்து குனியமுத்தூர் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் நிலையம் முன்பு அமர்ந்த இந்து அமைப்பினர் பஜனை பாடல்களை பாடி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில இணைச்செயலாளர் அமர்நாத் சிவலிங்கம் என்பவர் தன் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவரை தடுக்க முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த தெற்கு உதவி ஆணையர் செட்ரிக் மனுவேல் தலைமையில் காவல்துறையினர் இந்து அமைப்பின் முக்கிய பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முற்றுகை காரணமாக குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.