கோவை: கோவையில் கோவில்மேடு பகுதியில் ஒரு வீட்டில் 35 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டது.
கோவை: கோவையில் கோவில்மேடு பகுதியில் ஒரு வீட்டில் 35 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டது.
கோவை கோவில்மேடு திலகர் வீதி பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டின் குளியலறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்ட அவர், பாம்பு பிடிக்கும் முரளி என்பவரிடம் தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, அங்கு சென்ற முரளி குளியல் அறையின் ஒரு மூலையில் பதுங்கி இருந்த பாம்பை மீட்டு, தான் கொண்டு சென்றிருந்த பையினுள் பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளார். பின்னர் அதனை வனப்பகுதிக்குள் விட இருந்த போது, பிடிபட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அப்பாம்பு தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுக்க துவங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த முரளி அதே பகுதியில் ஒரு ஓரமாக அந்த பையை வைத்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுத்த பாம்பு சுமார் 35 குட்டிகளை ஈன்றுள்ளது.
பின்னர் பாம்பினை குட்டிகளுடன் இன்று மாலைக்குள் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட இருப்பதாக முரளி தெரிவித்துள்ளார். அதிக நச்சுத்தன்மை கொண்ட பாம்பு வகையான கண்ணாடி விரியன் பாம்பு குட்டி போடும் வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.