கோவை: கோவையில் நாளை முதல் தேவாங்க பள்ளி மைதானத்திற்கு பூ மார்க்கெட் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் நாளை முதல் தேவாங்க பள்ளி மைதானத்திற்கு பூ மார்க்கெட் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. பூக்கள் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் இங்கு நடக்கிறது.
கோவை மட்டுமல்லாமல் வெளிமாவட்டங்களில் இருந்தும் பூக்கள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் கோவை பூ மார்க்கெட்டிலிருந்து வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோவையின் அடையாளம் என்று சொல்லும் அளவிற்கு பூ மார்க்கெட் புகழ் பெற்றது.

இதனிடையே, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மார்க்கெட் கடைகள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தில் மாநகராட்சி நிர்வாகம் கடைகளை அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் செல்ல முடியாதபடி சிமெண்ட் சீட்டுகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாளை(24-6-2020) முதல் கோவை ப்ரூக்பீல்டு எதிரில் உள்ள தேவாங்க பள்ளி மைதானத்திற்கு பூ மார்க்கெட் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாகவும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை விற்பனை நடைபெறும் என்று கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, பூக்கள் வாங்க வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.