கோவை: கோவையில் பிரபல அலைபேசி விற்பனை உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் பிரபல அலைபேசி விற்பனை கடையான சென்னை மொபைல்ஸில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. முக கவசங்கள் அணியாதவர்களுக்கு அபராதம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கோவையில் வணிக ரீதியிலான தொடர்பில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை ஏற்பட்டு விடுமோ அச்சம் எழுந்துள்ளது. காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல நகைக் கடைக்கு சென்னையில் இருந்து அழைத்துவரப்பட்ட ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், காந்திபுரம் பகுதியில் இயங்கி வரும் பிரபல அலைபேசி விற்பனை கடையான சென்னை மொபைல்சில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, கடைகளுக்கு வந்தவர்களின் பட்டியலை சுகாதார துறை அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனர்.

மேலும், அவர் வசிக்கும் நான்காவது வீதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல், 11வது வீதியிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
கோவையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுப் பாதுகாப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.