கோவை: கோவை ஆனைகட்டியில் வாயில் காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் தவித்து வந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை: கோவை ஆனைகட்டியில் வாயில் காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் தவித்து வந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை ஆனைக்கட்டி பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டதால் உணவு உண்ண முடியாமல் தவித்து வந்த நிலையில் 2 நாட்களாக பழங்களினுள் மாத்திரைகள் வைத்து வனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் சிகிச்சைகள் அளித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வரை சிகிச்சை அளிக்கப்பட்டதில் நேற்று காலை சுமார் 9 மணி வரை அப்பகுதியில் சுற்றி வந்தது. ஆனால், 9 மணிக்கு மேல் மிகவும் சோர்வடைந்து கீழே படுத்து விட்டது. எனவே ஊசிகள், மருந்துகள் மூலம் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று சிறிதளவு மட்டுமே உடல்நலம் தேறிய நிலையில் மேலும் சோர்வடைந்தது.
இதையடுத்து, வனத்துறையினர் மற்றும் சுகுமார் தலைமையில் மருத்துவர் குழு வந்து சுமார் 25 பாட்டில்கள் குளுக்கோஸ் மற்றும் சத்து நிறைந்த மருந்துகள், எதிர்ப்பு சக்தி மருந்துகள், வலி நிவாரணிகள் போன்றவற்றை ஊசிகளின் மூலம் வழங்கினர். நேற்று முன்தினம் இருந்ததை விட நேற்று யானையின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதென மருத்துவர் குழு தெரிவித்திருந்தனர். 10 நாட்களுக்கு முன் மூங்கில் அல்லது மரத்தின் உச்சி குத்தி சீல் பிடித்ததால் இந்த நிலைமை ஏற்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை யானை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த சில மாதங்களில் கோவை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகங்களில் 7 காட்டு யானைகள் இறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.