கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
குறிப்பாக, கொரோனா தொற்று அதிகம் உறுதி செய்யப்பட்டுள்ள டெல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக கோவை வருபவர்கள் அதிகரித்துள்ளதால் கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில், கோவையில் இன்று மேலும் 11 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 ஆண்களும், பெண்கள் 5 பேருக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மைலம்பட்டியில் 2 பேருக்கும், காந்திபுரத்தில் 2 பேர், சவுரியபாளையம் 2 பேருக்கு, பொள்ளாச்சி, பெரியகடைவீதி, ராஜவீதி, அன்னூர் ஆகிய பகுதிகளை சார்ந்த தலா ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், சின்னியம்பாளையம் நோய் பாதித்தவருடன் தொடர்பில் இருந்த இருவருக்கு இன்று தொற்று ஏற்பட்டுள்ளது.
காந்திபுரம் பகுதியை சேர்ந்த இருவரும் கடந்த 16ம் தேதி வாலாஜாபாத்திற்கு துக்க வீட்டிற்கு சென்று வந்தவர்கள் ஆவர். இதேபோல் சவுரிபாளையம் சேர்ந்த இருவர் 19ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களாகும்.
இந்நிலையில், கோவை காந்திபுரம் ஜி.ஆர்.டி நகைக்கடைக்கு சென்னையில் இருந்து வந்த 30 ஊழியர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முடிவு நாளை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.