கோவை: ஏப்ரல் மாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் பஞ்சாலைகளை இயக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட என்டிசி பஞ்சாலை தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
கோவை: ஏப்ரல் மாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் பஞ்சாலைகளை இயக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட என்டிசி பஞ்சாலை தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
மத்திய அரசிற்கு சொந்தமான என்டிசி பஞ்சாலைகள் தமிழகத்தில் ஏழு ஆலைகள் இயங்கி வருகின்றது. இதில் கோவையில் மட்டும் ஐந்து பஞ்சாலைகள் உள்ளது. இதில் பலநூறு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆலைகள் இயக்கப்படவில்லை. இதில் பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், என்டிசி நிர்வாகம் ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வந்தது.
இதனையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் என்டிசி நிர்வாகிகள், தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் ஊதியத்தை வழங்குவது என்றும் ஆலையை இயக்குவது குறித்து மத்திய ஜவுளித்துறைக்கு தெரியப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், எடுக்கப்பட்ட முடிவுகளை ஜூன் 15ம் தேதியை கடந்தும் மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து பஞ்சாலை தொழிலாளர்கள் அனைத்து என்டிசி ஆலைகளிலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் முடிவாக என்டிசி நிர்வாகத்தை சந்தித்து பேசுவது என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் பஞ்சாலை தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், ஒத்துக்கொண்ட முடிவை நடைமுறைப்படுத்தாமல் என்டிசி நிர்வாகம் தொடர்ந்து பிடிவாத போக்குடன் செயல்பட்டதால் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் இதன் தொடர்ச்சியாக உடன்பாடு எட்டப்படும் வரையில் காட்டூரில் உள்ள என்டிசி தலைமையக வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.