கோவை: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை, பிறப்பு சான்றிதழ் வாங்க வந்த பெற்றோரிடம் இருந்து நூதனமாக குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை, பிறப்பு சான்றிதழ் வாங்க வந்த பெற்றோரிடம் இருந்து நூதனமாக குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராணி,செல்வம் தம்பதியினர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து பிரசவம் முடிந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று தம்பதியினர் தங்களது இரு ஆண் குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக திருப்பூரிலிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது மருத்துவமனை வளாகத்தில் இருந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தான் பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தருவதாக கூறி செல்வராணியிடம் இருந்த ஒரு ஆண் குழந்தையை எடை போட வேண்டுமென்று வாங்கிச் சென்றுள்ளார்.
தொடர்ந்து நீண்ட நேரமாகியும் அந்தப் பெண்மணி வரவில்லை என்பதால், பெற்றோர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் மையத்தில் தகவல் கொடுத்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பந்தய சாலை காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் குழந்தை காணாமல் போனது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.