கோவை: கோவை சுண்டக்காமுத்தூர் மயானத்தில் ஆதரவற்ற நிலையில் தவித்து வந்த 55 வயதுடைய பெண்ணை பொதுமக்கள் உதவியுடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் (தமுமுக) மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த நிகழ்வு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
கோவை: கோவை சுண்டக்காமுத்தூர் மயானத்தில் ஆதரவற்ற நிலையில் தவித்து வந்த 55 வயதுடைய பெண்ணை பொதுமக்கள் உதவியுடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் (தமுமுக) மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த நிகழ்வு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
பணத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாழும் மனிதன் தற்போது அன்பு, பாசம், சொந்த பந்தம் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறான். அதேபோல தன்நலத்துடன், தன் மனைவி, தன் பிள்ளை எனக் குறுகிய வட்டத்தில் நாகரீக மனிதர்களாக காட்டிக்கொள்ளும் இம்மனிதர்கள் தங்களின் பெற்றோர்களை சாலையோரங்களிலும், அரசு மருத்துவமனை வெளிப்புறங்களிலும் அனாதைகளாக விட்டுச்செல்லும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.
கோவையின் அடையாளங்களாக மாறி வரும் முதியோர் காப்பகங்கள்:-
தென்னகத்தின் மான்சிஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டம் தொழில் வர்த்தகத்தில் அடைந்து வந்த வளர்ச்சியை போல முதியோர் காப்பகங்கள் எண்ணிக்கை வளர்ச்சியிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதற்கு காரணமாக சொல்லப்படுவது தனிக்குடும்ப வாழ்க்கை முறை என்ற சுயநலமனநிலையில் பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களை முதியோர் காப்பகங்களில் அனுமதிப்பதே என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
தொடரும் இந்த மனிதநேயமற்ற செயல்கள் தற்போது ஒரு படி ஏறி, முதியோர்களை சாலையோரங்களில் அனாதைகளாக விட்டுச் செல்வது, கோவை அரசு மருத்துவமனையின் வெளிப்புறத்தில் விட்டுச் செல்வது, என ஓங்கி மரணத்திற்குப்பின் அடக்கம் செய்யக்கூடிய மயானத்திலும் உயிருடன் விட்டுச்செல்லும் மனநிலையும் உருவாகியுள்ளது.
கோவையில் மயானத்தில் மீட்கப்பட்ட பெண்:-
கோவை மாவட்டத்தில் உள்ள மயானத்தில் பெற்ற தாயை விட்டு சென்ற நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள மயானத்தில் கடந்த சில மாதங்களாக சுமார் 55 வயது மதிக்கத்தக்க விஜயா என்ற பெண் ஆதரவற்ற நிலையில் தங்கள் உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் தவித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த ஆதரவற்ற பெண்ணிற்கு தங்களால் முடிந்த உணவுகளை அளித்து வந்தனர்.
பின்னர் கொரோனா தொற்று பீதியால் அவரக்கு உணவு வழங்குவதை பொதுமக்கள் கைவிட தொடங்கினர். இருப்பினும், நல்ல உள்ளம் கொண்ட அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அவரை பத்திரப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின், கோவை மாவட்ட துணை செயலாளர் ஆசிக் அஹமதிற்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, அப்பெண்ணை மீட்க அவ்வமைப்பின் மருத்துவ அணி செயலாளர் ஆசிக், அந்த மயானத்திற்கு ஒரு பெண் துணையுடன் சென்று ஆதரவற்று சுற்றி திரிந்த அப்பெண்ணுக்கு சிகை திருத்தி, தூய்மைபடுத்தினார்.
தொடர்ந்து, அவரை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு, பல்வேறு போராட்டங்களுக்கு பின் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் மாநகராட்சி தங்கும் விடுதியில் அனுமதித்தார்.
இதில், அந்த பெண்ணை மீட்ட தமுமுக வை சேர்ந்த இளைஞருக்கு ஒருபுறம் பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும், மறுபுறம் வயது முதிர்ந்த பெண்ணை உயிருடன் மயானத்தில் விட்டுச்சென்ற கயவர்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், வரும் காலங்களில் மூத்த குடிமக்களை பாதுகாக்கும் சட்டங்களை காவல்துறையும், நீதித்துறையும் முறையாக பயன்படுத்தி இதுபோல குடும்ப நபர்களை வீதியில் தவிக்கவிட்டு செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.