கோவை: தமிழகத்தில் மேலும் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது.
கோவை: தமிழகத்தில் மேலும் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,914 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 1,927 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இன்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 1,927 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 1,008 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,333 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தற்போது வரை 326 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கொரோனா வைரஸ் தொற்றின் சோதனை மையங்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை மையங்கள் மூலம் இதுவரை 6 லட்சத்து 38 ஆயிரத்து 846 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,392 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல, கோவையில் மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கோவைபுதூரை சேர்ந்த 25 வயது கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை திரும்பிய ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 24 வயது பெண்ணிற்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிமாவட்டத்தில் இருந்து கோவை வந்த மற்றொரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், திருப்பூர் மற்றும் நீலகிரியில் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை. இதனால், நீலகிரியில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 ஆக உள்ளது. அதேபோல, திருப்பூரில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 114 ஆக உள்ளது.