கோவை: தமிழகத்தில் மேலும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது.
கோவை: தமிழகத்தில் மேலும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 1,438 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இன்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 1,438 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 861 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,762 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தற்போது வரை 232 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கொரோனா வைரஸ் தொற்றின் சோதனை மையங்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை மையங்கள் மூலம் இதுவரை 5 லட்சத்து 60 ஆயிரத்து 673 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,116 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 19,826 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், திருப்பூர் மற்றும் நீலகிரியில் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை. இதனால், நீலகிரியில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 ஆக உள்ளது. மேலும், திருப்பூரில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 114 ஆக உள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினத்தை போல இன்று வெளியிடப்பட்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சக பட்டியலிலும், கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது முரண்பாடான உள்ளதால் கோவை மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
கோவையில் நேற்று வரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 153 ஆக சுகாதாரத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கோவையில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் தற்போது வரை 155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கோவை மக்களை குழப்பமடைய செய்துள்ளது.