கோவை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சர்வாதிகாரி போல் செயல்பட்டு வருவதை கண்டித்து கோவையில் நாளை உள்ளாட்சி அமைப்புகள் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக எம்.எல்.ஏ நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கோவை: "உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சர்வாதிகாரி போல் செயல்பட்டு வருவதாகவும், அவர் தூண்டுதலின் பேரில் திமுகவினர் தொடர்ந்து பொய் வழக்கில் கைது செய்யப்படுகின்றனர்", என திமுக எம்.எல்.ஏ, நா.கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார்.
"இது போன்ற சர்வாதிகார நடவடிக்கைகளை கண்டித்து திமுக சார்பில் நாளை, ஜூன் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.
கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல்வேறு முறைகேடுகள் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி துறையில் ஊழல் நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.
அதேபோல, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூண்டுதலின் பேரில், காவல் துறையினர் திமுகவினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து அவர்களை கைது செய்கின்றனர் எனவும், திமுகவினர் மீது தொடர் வழக்குகளை போட்டு அச்சுறுத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
மேலும், உள்ளாட்சித் துறை அமைச்சரை எதிர்த்து விமர்சிப்பதற்காக, போராடுவதற்காக இனிமேலும் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டால், நானே கோவைக்கு வந்து மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்துள்ளார், என சுட்டிக்காட்டினர், எம் எல் ஏ நா கார்த்திக்.
"ஆகவே, இந்த இயக்கத்திற்காக ஓயாது உழைத்திடும், உயிரினும் மேலான ஒவ்வொருவரையும் காப்பாற்றிடும் பொருட்டு, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சர்வாதிகாரத்தை கண்டித்தும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஏவல் துறையாக மாறியிருக்கும் காவல் துறையைக் கண்டித்தும் சமூக இடைவெளியோடு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (5.06.2020) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது", என தெரிவித்தார்.
"எனவே, மாவட்டக் கழக, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழக செயல் வீரர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் உள்ள மாநகராட்சி உள்ளாட்சி அமைப்பு அலுவலகம் முன்புறம் சமூக இடைவெளியோடு இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும்" என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.