நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்த ஒற்றை காட்டு யானையால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்த ஒற்றை காட்டு யானையால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தற்போது பலாப்பழங்கள் அதிகளவில் காய்த்து உள்ளதால் இதனை சாப்பிடுவதற்காக சமவெளி பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக யானைகள் வரத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென சாலைக்கு வந்து வாகனங்களை மறித்தது. இதனை கண்ட வாகன ஓட்டுநர்கள் ஆங்காங்கே சாலையில் வாகனங்களை வரிசையாக நிறுத்தினர். யானை சாலையின் குறுக்கே ஒரு மணி நேரம் நின்று பிறகு மெதுவாக நடந்து ஒவ்வொரு வாகனத்தையும் நோட்டமிட்டு சாலையில் நடந்து சென்று மீண்டும் சாலையின் குறுக்கே நின்று வாகனங்களை மறித்தது.
அதேசமயம், வாகன ஓட்டுநர்கள் எந்த ஒலியும் எழுப்பாமல் பொறுமையாக இருந்தனர். சுமார் 1 மணி நேரம் சாலையில் நின்ற யானை சாலையின் அருகில் உள்ள செடிகளுக்குள் சென்றது.
இதனை தொடர்ந்து நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள் யானை மீண்டும் சாலைக்கு வருவதற்குள் வாகனத்தை இயக்கி சென்றனர். திடீரென அப்பகுதிக்கு யானை வந்ததால் உடனடியாக வனத்துறையினர் அப்பகுதிக்கு குன்னூரில் இருந்து வர முடிவதில்லை.
இதனிடையே, தற்போது தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே யானைகள் வாகனத்தை தாக்குவதற்கு முன்பாக இப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.