திருப்பூர்: திருப்பூரில் பிரபல நகை அடகு கடையில் அரிவாளை காட்டி கொள்ளையடித்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் பிரபல நகை அடகு கடையில் அரிவாளை காட்டி கொள்ளையடித்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி குமரன் சாலை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இங்கு தனியார் நகை அடகு கடையின் கிளை (அட்டிகா கோல்டு லோன்) அமைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கடைக்குள் ஹெல்மெட் அணிந்தபடி நுழைந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி நகை அடகு வைப்பவர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 சவரன் நகை ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
அரிவாளைக் கொண்டு மிரட்டியதால் ஊழியர்கள் அச்சம் அடைந்து செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனையடுத்து, அந்நிறுவனத்தின் மேலாளர் தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் பதிவாகி இருந்த நபர் முன்னதாக பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட சிறுபூலுவப்பட்டி பகுதியை சேர்ந்த அழகுராஜ் என்பது தெரியவந்தது. இவர் திருடிய நகைகளை இங்கு அடகு வைத்து வந்துள்ளார். அப்போது, நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.