கோவை: பொது முடக்கத்தை அறிவித்துவிட்டு தொழிலாளர் நலச்சட்டங்களை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து கோவையில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: பொது முடக்கத்தை அறிவித்துவிட்டு தொழிலாளர் நலச்சட்டங்களை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து கோவையில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உலகெங்கிலும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பொது முடக்கத்தை பயன்படுத்திக் கொண்டு பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, தொழிலாளர் நலச்சட்டங்களை பறிப்பது என தொழிலாளர் விரோத நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருவதாகவும் இதனை கண்டித்து நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன இயக்கங்களை நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தது.
இதன் ஒரு பகுதியாக, கோவை இருகூர் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருப்புக்கொடி ஏந்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் போராடிப்பெற்ற வேலை நேரத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும், முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்த கூடாது, ஊரடங்கு காலம் முழுமைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு சம்பளம் வழங்கிட வேண்டும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகளை செய்து கொடுக்கப்பட வேண்டும், சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்களாக எழுப்பினர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைகள் என கோவையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உரிமை முழக்க போராட்டம் நடைபெற்றதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.