இ-பாஸ் பெற்றாலும் ஆனைக்கட்டி வழியாக தமிழகம் வர அனுமதி மறுக்கப்படுவதால்; பத்தாம் வகுப்பு தேர்வெழுத மாணவர்களுக்கு சிக்கல்..!
கேரள அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பள்ளியில் பயிலும் கேரளா வாழ் தமிழ் மாணவர்கள் 21 பேர் பத்தாம் வகுப்பு தேர்வெழுத வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. இ-பாஸ் பெற்றாலும் ஆனைக்கட்டி வழியாக தமிழகம் வர அனுமதி மறுக்கப்படுவதால் மாற்றுப்பாதையில் 180 கிலோ மீட்டர் சுற்றி தேர்வெழுத வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜீன் மாதம் ஒன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், ஜீன் 15 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜீன் ஒன்றாம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மூடப்பட்டுள்ள வெளி மாநில எல்லைகள் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தல் உள்ளிட்டவை இருப்பதால் கோவை மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் உள்ள ஆனைக்கட்டி உயர் நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுத வருவதில் சிக்கல் நிலவுகிறது.
ஆனைக்கட்டி பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில், தமிழகத்தை ஒட்டி கேரளாவிற்குள் அமைந்துள்ள அட்டப்பாடி, சோலையூர், அகழி, கூலிக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழ் பழங்குடிகள் மற்றும் மற்ற தமிழ் மாணவர்களும் பயின்று வருகின்றனர். சுமார் 60 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்தப்பள்ளியில் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 8 கிலோ மீட்டர் சென்று சின்னத்தடாகம் பள்ளியில் தேர்வு எழுதி வந்தனர்.
கொரோனா காரணமாக முதல் முறையாக இப்பள்ளி மாணவர்கள் தேர்வெழுத இப்பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அட்டப்பாடி பகுதியில் உள்ள 21 மாணவ, மாணவிகள் தேர்வெழுத தமிழகம் வருவதில் சிக்கல் நிலவுகிறது.nஇதேபோல சின்னத்தடாகம் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 15 மாணவர்கள் 11 ம் வகுப்பு தேர்வெழுத வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆனைக்கட்டியில் உள்ள சோதனைச்சாவடியில் கேரள அதிகாரிகள் அதிக கெடுபிடிகள் செய்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இ-பாஸ் பெற்று வந்தாலும் ஆனைக்கட்டி வழியாக தமிழகம் வர கேரள அதிகாரிகள் அனுமதி மறுத்து வருவதாகவும் தேர்வு அட்டவணை மாறி மாறி அறிவிக்கப்படுவதால் குழப்பத்தில் உள்ளதாகவும், எப்படி தேர்வெழுத வருவது என்பது தெரியாமல் பரிதவிப்பதாகவும் கேரளாவில் உள்ள தமிழ் மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும், மாநில எல்லைகளை கடந்து தேர்வெழுத செல்வதால் கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அந்த பள்ளியில் பயிலும் மாணவி மெரினா ஜென்சி கூறுகையில்:-
பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் பெற்று பாலக்காடு, வாளையார், கோவை வழியாக பள்ளிக்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும், அதிகபட்சமாக 10 கிலோ மீட்டருக்குள் செல்ல வேண்டிய பள்ளிக்கு மாற்றுப்பாதையில் 180 முதல் 200 கிலோ மீட்டர் வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது நடைமுறைக்கு சாத்தியமில்லை என தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஜோஸ்வா கூறும்போது, ஆனைக்கட்டி சோதனைச்சாவடி வழியாக தேர்வெழுத தமிழக மாணவர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் அதற்கு கோவை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.