கோவை: தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10,108ஆக அதிகரித்துள்ளது.
கோவை: தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 434 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இன்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 434 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10,108ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 359 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2599ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தற்போது வரை 71 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 309 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 5946ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 146 ஆக உள்ளது.
அதேபோல, திருப்பூரில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 114 ஆக உள்ளது. மேலும், நீலகிரியில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14ஆக உள்ளது.