கோவை மாவட்டம் அன்னூர் அருகே தீயணைப்பு பணியில் இருந்த காவலர் கால் தவறி நெருப்புக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சக தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே தீயணைப்பு பணியில் இருந்த காவலர் கால் தவறி நெருப்புக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சக தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காட்டம்பட்டி பகுதியில் வேலுச்சாமி என்பவர் தனது தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் பழைய அட்டைப்பெட்டிகள் சேகரித்து விற்பனைக்காக வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை அட்டைப்பெட்டிகள்வைக்கபட்டு இருந்த இடத்தில் தீப்பற்றி எரிந்தது. மளமளவென தீ பரவி அருகில் உள்ள வீட்டிற்கும் தீ பரவும் சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து அருகில் வசித்தவர்கள் அன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
அப்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தகண்ணன் என்ற தீயணைப்பு வீரர் கால் தவறி நெருப்புக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட சக வீரர்கள் உடனடியாக கண்ணனை மீட்டு கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விபத்தில் கண்ணனின் கை மற்றும் கால்களில் லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து,அவருக்கு மருத்துவமனையில்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தீ விபத்தில் சில லட்சம் மதிப்பிலான அட்டை பெட்டிகள் எரிந்து இருக்கலாமென போலீசார் தெரிவித்தனர்.எனினும், முழுமையான விசாரணைக்கு பின்னரே சேத மதிப்பு தெரிய வரும் என்றும் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.