கோவை: கட்டணம் கட்டச்சொல்லி நிர்பந்தம் செய்யும் தனியார் கல்வி நிலையங்களின் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
கோவை: கட்டணம் கட்டச்சொல்லி நிர்பந்தம் செய்யும் தனியார் கல்வி நிலையங்களின் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ள நிலையிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக கல்விக் கட்டணத்தை கட்ட சொல்லி நிர்பந்திப்பதாக பெற்றோர்களிடம் இருந்து புகார் வருகிறது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் தலையீடு செய்து இந்த சட்டவிரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதோடு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மாணவர்களை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூல் செய்யக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் தேவைப்பட்டால் பள்ளி வளாகத்தை பேரிடர் மேலாண்மைக்காக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், சுயநிதி தனியார் பள்ளிகள் பெற்றோர்களை கட்டணம் செலுத்த சொல்லி கட்டாயப் படுத்துவதாகவும், அவ்வாறு கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு மட்டும் இணையவழி கல்வி வழங்கப்போவதாகவும் தெரியவருகிறது.
மேலும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டில் தங்கள் பள்ளியில் கல்வி கற்க இயலாது என்று மிரட்டும் படுவதாகவும் தெரிகிறது. சில பள்ளிகளில் ஆசிரியர் உள்ளிட்ட சில ஊழியர்களை பள்ளிக்கு வரவழைத்து அலுவலக பணி நடைபெறுவதாகவும் புகார் எழுகிறது. ஆசிரியர், ஊழியர்களுக்கு மாத ஊதியத்தை முழுமையாக தரவில்லை என்றும் புகார் எழுகிறது. இவை அனைத்தும் சட்டவிரோத செயல் என்பதை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள் உணர்ந்து தங்கள் நடவடிக்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் இதில் கூடுதல் கவனம் செலுத்தி அரசு அனுமதி இல்லாமல் பள்ளி அலுவலகம் உள்ளிட்ட பள்ளியின் எந்த பகுதியும் திறக்கக் கூடாது என்பதை பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். பேரிடர் காலம் என்பதால் மத்தியப் பாடத்திட்டமா, மாநிலப் பாடத்திட்டமா என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து பள்ளிகளும் தமிழ்நாடு அரசின் நிர்வாக ரீதியான உத்தரவுகளை பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர் உத்திரவாதப்படுத்த வேண்டும்.
மேலும், ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் கொடுக்கப்பட்டதையும், ஊரடங்கு காலம் விலக்கிக் கொள்ளப்பட்டு பள்ளிகள் மீண்டும் திறக்கும் வரை மாணவர்களை கட்டணம் செலுத்த கட்டாயப் படுத்த மாட்டோம் என்று எழுத்து பூர்வமான உத்திரவாதத்தை பள்ளி நிர்வாகங்கள் வழங்கிட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.