கோவை: கோவையில் டாஸ்மாக் கடையின் மேற்புற ஓடுகளை பிரித்து மதுபானங்களை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் டாஸ்மாக் கடையின் மேற்புற ஓடுகளை பிரித்து மதுபானங்களை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக்கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மதுபான கடைகள் திறக்கப்படாது என டாஸ்மாக நிர்வாகம் அறிவித்தது. இதனால் மதுப் பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் கோவை செல்வபுரம் சாலை செட்டி வீதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை (1672) மேற்புறத்தில் உள்ள ஓடுகளைப் பிரித்து இளைஞர் ஒருவர் உள்ளே நுழைய முயன்றுள்ளார். இதனை கண்ட நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்கள் பெரிய கடை வீதி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, மதுபானக் கடைக்குள் இறங்க முயற்சித்த நபர் பின் வழியாக குதித்து தப்பி ஓடினார். தகவல் கிடைக்கப் பெற்று சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையர் ஸ்ரீ ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் மதுபானக் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது மது பாட்டில்கள் ஏதும் திருடப்படவில்லை என தெரியவந்தது.
மது பாட்டில்கள் திருட வந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனையடுத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் மற்றும் அதிகாரிகள் அக்கடைக்கு வெல்டிங் மூலம் சீல் வைத்தனர்.