கோவை: ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவை புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாநகர பகுதிகளில் சிறு, குறு, நடுத்தர தொழில் கூடங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் தொழில் தொடர்ந்து நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புறத் தொழில்கள் ஆகியவை எந்தவித முன் பணியாளர்களுக்கும், வாகனங்களுக்கும் ஏற்கனவே உள்ள நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாநகராட்சி பகுதிகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இயங்க அனுமதி இல்லை. நகைத்தொழிற்பட்டறைகள், லேத், வெல்டிங், பிட்டிங் போன்ற தொழில்கள் செய்ய அனுமதி இல்லை.
ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெருந்தொழிற்சாலைகள் 50% பணியாளர்களோடு, மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று இயங்கிக் கொள்ளலாம்.
மாநகராட்சிப் பகுதியில் பெருந்தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இல்லை.
மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள நூற்பாலைகள் இயங்க அனுமதி இல்லை.
குறிச்சி மற்றும் மலுமிச்சம்பட்டியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை நிறுவனங்கள் முன் அனுமதி இன்றி இயங்கலாம். காளப்பட்டியில் உள்ள மின் மற்றும் மின்னணு தொழிற்பேட்டை நிறுவனங்களும் இயங்கலாம். அதற்கான முன் அனுமதி தேவை இல்லை.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி (உணவு மற்றும் மருத்துவம்) நிறுவனங்கள், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் (EOU), சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவை 50% பணியாளர்களோடு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று இயங்கலாம்.
15000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள ஆனைமலை, அன்னூர், கூடலூர், இருகூர், கண்ணம்பாளையம், காரமடை, கருமத்தம்பட்டி, கோட்டூர், மதுக்கரை, நரசிம்மநாயக்கன்பாளைம், பெரியநாயக்கன்பாளையம், சூளேஸ்வரன்பட்டி, சூலூர், வேடப்பட்டி, வெள்ளலூர், வேட்டைக்காரன்புதூர், ஜமீன் ஊத்துக்குளி ஆகிய பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று ஜவுளித்துறை நிறுவனங்களை 50 சதவீதம் பணியாளர்களை கொண்டு செயல்படலாம்.
மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் மின்னணு வன்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் (Hardware Manufacturers), மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT and (TES) சார்ந்த நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று இயங்கலாம்.
கோவை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகளில் அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
நோய் கட்டுப்பாடு பகுதிகளில் (Containment Zone) எந்த விதமான தொழில் தொடங்கவும் அனுமதி இல்லை.
தொழில் நிறுவனங்கள் தமிழக அரசால் (அரசாணை 217 நாள் 3.5.2020) வரையறுக்கப்பட்ட கொரோனா வைரஸ் பாதுகாப்பு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி இல்லை.
அரசு அறிவிப்புக்கு முரணாக, அனுமதியில்லாமல் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவது மற்றும் அது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தினை 0422 2391678 மற்றும் 96405 66320 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல, கோவை மாவட்டத்தில் மே-6 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட கடைகள்/நிறுவனங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்படாத கடைகள்:-
1. மால்கள்
2. வணிக வளாகங்கள்
3. பல்பொருள் அங்காடி
4. நகைக் கடைகள்
5. குளிர்சாதன வசதியுடன் உள்ள துணிக் கடைகள்
6. குளிர்சாதன வசதியுடன் கூடிய வீட்டு உபயோக பொருட்கள் அங்காடி
7. குளிர்சாதன வசதியுள்ள கைபேசி அங்காடி
8. பூ மார்கெட்
9. டீக்கடை, குளிர்பான கடை
10. சலூன், அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் சென்டர்
11. ஜிம்
12. ஆட்டோ, டாக்சி போன்றவை.
அனுமதிக்கப்படும் கடைகள்:-
1. இரும்பு கடைகள்
2. சிமெண்ட் கடைகள்
3. ஹார்டுவேர்ஸ்
4. மளிகைக் கடைகள்
5. தளவாடங்கள்
6. சைக்கிள் கடைகள்
7. விளையாட்டு பொருட்கள்
8. ஸ்பேர்ஸ் கடைகள்
9. மெக்கானிக்கல் கடைகள்
10. செல்போன் பழுதுபார்த்தல்
11. கண் கண்ணாடி கடைகள்
12. இனிப்பு கடைகள்
13. ஸ்டுடியோ
14. புத்தகக் கடைகள்
15. உலோக கடைகள்
16. பழக்கடைகள்
மேற்கண்ட கடைகளில், குளிர்சாதன வசதி இருந்து சமூக விலகலுக்கு வாய்ப்பில்லை எனில் அனுமதிக்கப்படாது.
அனுமதிக்கப்படும் கடைகள் மாநகராட்சிப் பகுதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும், ஊரசுப்பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே செயல்படலாம்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த கடையும் திறக்க அனுமதி இல்லை.
ஒவ்வொரு கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் முகக் கவசம் அணிந்து மட்டுமே பணியாற்ற வேண்டும்.
வாடிக்கையாளர்களும் தவறாது முகக் கவசம் அணிவதை உறுதி செய்திட வேண்டும்.
நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றாமலோ, அனுமதி இல்லாத கடைகளை திறந்தாலோ தொடர்புடைய கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கடைகள் திறப்பது மற்றும் தொடர்ந்து செயல்படுத்துவது குறித்த கூடுதல் விபரங்களுக்கு கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தொலைபேசி எண் 0422 2302323 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.