கோவை: சுற்றுலா பயணிகள் உணவு கொடுத்து பழகியதால் வாகனங்களை பார்த்து உணவிற்காக குரங்குகள் ஏங்கி நிற்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை: சுற்றுலா பயணிகள் உணவு கொடுத்து பழகியதால் வாகனங்களை பார்த்து உணவிற்காக குரங்குகள் ஏங்கி நிற்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மலைப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அப்பகுதியில் இருக்கும் குரங்குகளுக்கு தின்பண்டங்கள் கொடுப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதனை பழக்க படுத்திய காரணத்தால் குரங்குகளும் காடுகளில் கிடைக்கும் இயற்கை உணவு பழக்கத்தை மறந்து தின்பண்டங்களை உணவாக பழகிக்கொண்டுள்ளது.
தற்போது ஊரடங்கு காலகட்டத்தில் வாகனங்கள் அதிகம் செல்லாத மலைப்பாதைகளில் ஆங்காங்கே சாலையில் நிற்கும் குரங்குகள் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைக்காக செல்லும் ஒரு சில வாகனங்களைப் பார்த்து தங்களுக்கு உணவளிப்பார்களா என்று ஏங்கி நிற்கும் காட்சிகள் வேதனை அளிக்கின்றன.
சாதாரண நாட்களில் வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் உணவு வகைகளை ஆங்காங்கே சாலைகளில் வீசி செல்வதால் அதை தின்பதற்காக குரங்குகள் காட்டு பகுதிக்குள் தங்களுக்கு கிடைக்கும் உணவு வகைகளை விட்டுவிட்டு சாலையோரங்களில் படையெடுக்க ஆரம்பிக்கின்றன. அவ்வாறு சுற்றி திரியும் போது சில நேரங்களில் வாகனங்களில் அடிபட்டு குரங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறுவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது போன்று உணவுகளைக் குரங்களுக்கு செயற்கையாக கொடுத்து பழக்கியதால் காட்டுக்குள் தங்களுக்கு கிடைக்கும் பழங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை பல கிலோ மீட்டர் சென்று தேடி உண்ணும் பழக்கங்களைக் கைவிட்டு தற்போது சாலையோரங்களில் பசியோடு காத்து நிற்கும் அவலநிலை உள்ளதாகவும், இனிமேலாவது சாலையை வாகனங்களில் கடக்கும் சுற்றுலா பயணிகள் உணவு பொருட்களை சாலையோரங்களில் குரங்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியிருக்கின்றனர்.