கோவை: வால்பாறையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர, தற்காலிக மற்றும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவின் காரணமாக தேயிலை தோட்டப்பணிகள் முடக்கப்பட்டிருந்தது. மத்திய அரசால் கடந்த 1ம் தேதி முதல் தேயிலை தோட்டப் பணிகள் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. நீண்ட நாட்களாக மழை இல்லாத காரணத்தால் செடிகளில் தேயிலை கொழுந்து உற்பத்தி வெகுவாக குறைந்திருந்தது.
இந்நிலையில், வால்பாறையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் வால்பாறையில் 19 மி.மீட்டர் மழையும், சோலையார் அணை பகுதியில் 12 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது. இதன் காரணமாக தேயிலை செடிகளில் கொழுந்து அதிகரித்து வருகிறது.
தேயிலை செடிகளில் இலை அதிகரித்துள்ளதால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. தேயிலை உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

இதனால் தேயிலை தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.