கோவை: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் இருந்து, 30க்கும் மேற்பட்ட விசைத்தறி கூலி தொழிலாளர்கள், வறுமை காரணமாக கை குழந்தையுடன் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் இருந்து, 30க்கும் மேற்பட்ட விசைத்தறி கூலி தொழிலாளர்கள், வறுமை காரணமாக கை குழந்தையுடன் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஒட்டுமொத்த பணிகளையும் ஸ்தம்பிக்கச் செய்து, வாழ்வாதாரங்கள் குறித்து கேள்வி எழுப்பி வருகிறது.
ஏழை எளிய மக்கள் பயணம் செய்து வந்த பயணிகள் பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை மே 3ம் தேதி தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள், வெளியூரில் வேலை பார்த்து வருபவர்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், கோவை, கருமத்தம்பட்டி அடுத்த முத்துகவுண்டன் புதூர் பகுதியில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளது.
இதன் காரணமாக வேலை இல்லாமல் இருந்த விசைத்தறி ஊழியர்கள் உணவுக்காக விசைத்தறி உரிமையாளர் அட்வான்ஸ் முறையில் பணம் கொடுத்துள்ளார். ஊரடங்கு நிலை சீரானதும் வேலை செய்து அட்வான்ஸ் தொகையை கழித்து விட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் அச்சம் அடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்வது என்று முடிவு செய்து இன்று அதிகாலை அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

இந்த நிலையில், இன்று மதியம் திருப்பூர் வந்தடைந்த அவர்கள் திருப்பூரிலிருந்து காங்கேயம் நோக்கி நடந்து சென்றனர்.

இதில் தனசேகர்(23) தனது மனைவி மற்றும் கைகுழந்தையுடன் காங்கேயம் சாலை முத்து கவுண்டன் புதூர் பகுதியில் நடந்து சென்றபோது அவர்கள் அணிந்திருந்த செருப்பு அறுந்தது.
இதனால் வெயிலில் மேற்கொண்டு அவர்களால் நடக்க முடியவில்லை இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு அவர்களுக்கு மதிய உணவு அளித்து செருப்புகளை வழங்கினர்.
இதுகுறித்து தனசேகர் கூறுகையில், தற்போது ஊரடங்கு உத்தரவால் அனைத்து விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு தற்போது எந்த வேலையும் இல்லாமல் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். விசைத்தறி உரிமையாளரும் உங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொண்டு பணம் தருகிறார். ஊரடங்கு நிலை சீரானதும் வேலை செய்து வைத்துக்கொள்ள சொல்கிறார். இதனால் எங்களுக்கு கடன் சுமை அதிகமாகி வருகிறது.
எனவே, நாங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்வது என தீர்மானித்து இன்று நடந்து சென்றோம். ஆனால் வழியில் எனக்கும் எனது மனைவியின் செருப்பும் அறுந்துவிட்டதால் எங்களால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. எங்களது நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து உடனடியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உடனடியாக அவர்களுக்கு பாஸ் வழங்கி, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.