கோவை: கோவையில் காதலர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் இரண்டு காதல் ஜோடிகளுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது.
கோவை: கோவையில் காதலர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் இரண்டு காதல் ஜோடிகளுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது.
உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று காலை இரு காதல் ஜோடிகளுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது. காதல் திருமணம் செய்து கொண்ட இரு ஜோடிகளும் உறுதிமொழி ஏற்று திருமணம் செய்து கொண்டனர்.
இது தொடர்பாக பேசிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், இன்று மட்டும் 4 காதல் திருமணங்கள் செய்து வைக்கப்படுவதாகவும், இரு திருமணங்கள் முடிந்த நிலையில், மாலையில் இரு திருமணங்கள் நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். சாதிய கட்டுமானங்கள் தகர்த்து போக சாதி மறுப்பு காதல் திருமணங்கள் அவசியம் எனவும் கடந்த 2000ம் ஆண்டில் இருந்து இதுவரை கோவை பெரியார் படிப்பகத்தில் 4500 காதல் திருமணங்கள் செய்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் சிறப்பாக வாழ்கையை நடத்துகின்றனர் எனவும் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கடந்த 9 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும், காதல் திருமணம் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும், இன்று காதலர் தினம் என்பதால் இன்றைய தினத்தை தேர்வு செய்து திருமணம் செய்து இருப்பதாக காதல் திருமணம் செய்த வழக்கறிஞர் சீனிவாசன் தெரிவித்தார்.

மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு பெரியார் படிப்பக வாசலில் கேக்வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களும், ஏற்கனவே காதல் திருமணம் செய்து கொண்டவர்களும் கேக் வெட்டி உற்சாகமாக காதலர் தினத்தை கொண்டாடினர்.