கோவை: குடியுரிமை திருத்த சட்டம் - 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: குடியுரிமை திருத்த சட்டம் - 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள், இயக்கங்கள் பல்வேறு கட்சியினர், இஸ்லாமியர்கள் என பல தரப்பினரும் தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின்(JAAC) பொதுக்குழுவில் இன்று மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் , மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கு, மதச்சார்பின்மை என்பது நம் நாட்டின் உறுப்பு எனவும் மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் நாட்டு மக்களை பிளவுபடுத்தும் மத்திய அரசின் சட்டங்களை அனுமதியோம் என்று கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைவர் நந்தகுமார் கூறும்போது ;-
இந்த குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் சானத்திற்கு விரோதமானது. நான் இந்திய குடிமகன் என்பதை நானே ஆதாரங்களை கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என்பது ஆபத்தானது. இந்த சட்டத்தால் ஏழை எளிய மக்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். ஆகவே, மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.