கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக 36வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கின் முன்பு குடியுரிமை சட்ட திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக 36வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கின் முன்பு குடியுரிமை சட்ட திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பாரதியார் பல்கலைக்கழக 36வது பட்டமளிப்பு விழா ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பங்கேற்க வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கு முன் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை சட்ட திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக ஏற்கனவே தகவல் கிடைத்து இருந்ததால் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை கைது செய்ய முயன்றனர். ஆனால் கைதுக்கு உடன்படாமல் மாணவ, மாணவிகள் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும், இந்த மசோதா மக்களை பிளவு படுத்தும் விதமாக இருப்பதாகவும், இந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.
மத்திய அரசின் கவனத்திற்கு கோரிக்கைகள் செல்ல வேண்டும் என்பதற்காக ஆளுநர் வருகையின் போது இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை காவல் துறையினர் கைது செய்தனர். ஆளுநர் வருகைக்கு சில நிமிடங்கள் முன்பு விழா அரங்கிற்கு முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்கலைக்கழக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.