நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் நடைபெற இருக்கும் 124வது மலர் கண்காட்சியினை முன்னிட்டு மலர் நாற்று நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா துவங்கி வைத்தார்.
நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் நடைபெற இருக்கும் 124வது மலர் கண்காட்சியினை முன்னிட்டு மலர் நாற்று நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா துவங்கி வைத்தார்.

மலைகளின் அரசி என்று போற்றப்படும் நீலகிரிக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நீலகிரிக்கு சிறப்பு கூடுதல் சேர்க்கும் வகையில் பன்னிரண்டு ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும் நீல குறிஞ்சி மலர் உதகை மரவியல் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா கூறினார்.

மேலும், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள 124வது மலர்க் காட்சிக்கான மலர் செடிகள் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் சசி மோகன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாவரவியல் பூங்காவில் மலர் பாத்திகள் அமைத்து 5 லட்சத்திற்கு மேலான 400 வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படும் என்றார்.

கடந்த ஆண்டு 300 வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு கூடுதலாக 100 வகையான மலர்கள் நடவு செய்யப்படும் என்று தெரிவித்த அவர், ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலர்களான சைக்லமன், சினரேரியா, கிலக்ஸ்சீனியா, ரனுன்குலல் உள்ளிட்ட பல மலர்கள் இந்த ஆண்டு மலர் காட்சிக்கு சிறப்பு சேர்க்கும் என்று கூறினார்.