கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்தும் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்தும் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள் இயக்கங்கள், பல்வேறு கட்சியினர் என தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்தும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த உள்ளிருப்பு போராட்டத்தின் போது, கோவை விமான நிலையத்திலிருந்து பி எஸ் ஜி கல்லூரி வழியாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செல்வதையொட்டி கல்லூரி வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, கல்லூரி நிர்வாக தரப்பினர் மாணவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் நிறைவு பெற்றது.