திருப்பூர் : திருப்பூரில் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தவர்கள் மீது வெள்ளாளர் கல்லூரி பேருந்து மோதியதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : திருப்பூரில் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தவர்கள் மீது வெள்ளாளர் கல்லூரி பேருந்து மோதியதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தனது மாமியார் பார்வதியுடன் (57) சிவன் மலைப்பகுதியில் நடைபெறவுள்ள திருமணத்திற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். திருப்பூர் சந்திராபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வெள்ளாளர் கல்லூரி பேருந்து மோதியதில் நிலைதடுமாறிய கருப்புசாமி கீழே விழுந்தார்.
இதில், பின்னால் அமர்ந்திருந்த மாமியார் பார்வதி கீழே விழுந்ததில், அவர் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இதனைப் பார்த்த அந்த பகுதியினர் உடனடியாக பேருந்தை சிறைபிடித்து, காயம் பட்டிருந்த கருப்புசாமி உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, சாலை விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்கு காரணமான வெள்ளாளர் கல்லூரி பேருந்து ஓட்டுநர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். திருமணத்திற்கு செல்லும் வழியில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.