கோவை : ஆலாந்துறை அருகே 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த இளைஞரை 2 மணிநேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவை : ஆலாந்துறை அருகே 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த இளைஞரை 2 மணிநேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினரின் தியாகமும், வீரமும் சமூக வலைதளங்களில் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. மேலும், இவர்கள் தீயை அணைப்பது மட்டுமல்லாமல், மீட்பு பணியில் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் ஆபத்தில் உள்ள உயிரை காப்பாற்றியும் வருகின்றனர். குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் மற்றும் அவரது தந்தையை தீயணைப்பு வீரர்கள் விரைவாக மீட்டு முதலுதவி கொடுத்து உயிர் பிழைக்க வைத்தனர். இந்த சம்பவம் குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றது.

இந்த நிலையில், கோவையில் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த இளைஞரை மீட்க, மீட்பு பணி துறையினர் படும் பாடுகள் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை ஆலாந்துறையையடுத்த இருட்டுப்பள்ளம் பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான திறந்தவெளி கிணறு உள்ளது. நீர் இல்லாத வற்றிய இந்த கிணற்றின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்ற 19 வயது இளைஞர் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். இப்படியிருக்க இளைஞர் திடீரென வழுக்கி கிணற்றில் விழுந்தார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கும், காருண்யா நகர் காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட அலுவலர் பாலசுப்ரமணியன் உத்தரவின்பேரில், நிலைய அலுவலர் ரவி சந்திரன் தலைமையிலான ஜீவா, ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட குழுவினர் விரைந்து வந்தனர். இதை தொடர்ந்து, அவர்கள் இளைஞரை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

90 அடி ஆழம் உள்ள கிணற்றில் இறங்கி, அண்ணாமலையை கயிற்றில் கட்டி மேலே தூக்கினர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் லேசான காயங்களுடன் அண்ணாமலையை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் அந்த இளைஞனை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இந்த சம்பவங்களை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினரின் வீரதீர செயல்களை பாராட்டிச் சென்றனர்.தீயணைப்பு துறையினர் இளைஞரை மீட்டு காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.