கோவை : மேட்டுப்பாளையம் அருகே நடந்த ஆணவ கொலையை கண்டித்து முற்போக்கு வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே நடந்த ஆணவ கொலையை கண்டித்து முற்போக்கு வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. அவரது மகன் கனகராஜ், உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, நேற்று முன்தினம் மாலை கனகராஜ் தங்கியிருந்த பகுதிக்கு சென்ற அவரது அண்ணன் வினோத், பட்டியலின பெண்ணை திருமணம் செய்யக் கூடாது என தம்பி கனகராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் கனகராஜை சராமாரியாக வெட்டியுள்ளார். இதில், கழுத்து, கை மற்றும் தலை உள்ளிட்ட பகுதியில் பலத்த வெட்டுபட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வர்ஷினி பிரியாவும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டார்.. இதில், காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில், வர்ஷினி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், ஆணவ கொலையை கண்டித்து முற்போக்கு வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஆணவ கொலை தொடர்பாக அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தினர்.