கோவை : காளிமங்கலம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரி ஆலந்துறை அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : காளிமங்கலம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரி ஆலந்துறை அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அடுத்த ஆலாந்துறை பகுதியில் உள்ள காளிமங்கலம் பகுதி மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியை ஒட்டிய பகுதியாகும். இங்கு அடிக்கடி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில், கிராமத்திற்கு அருகில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் 600 வீடுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்திருந்தனர். ஏற்கனவே, யானை நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் கூடுதலாக ஆயிரக்கணக்கான மக்கள் குடியமர்த்தப்பட்டால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும், தங்களுடன் சேர்த்து புதிதாக குடியமர்த்தப்படும் மக்களும் யானை தாக்குதல்களுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில், கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி காளிமங்கல கிராம மக்கள் ஆலந்துறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால், கோவை சிறுவாணி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு வந்த ஆலாந்துறை போலீசார் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், அதிகாரிகள் வந்து உத்தரவு வரும் வரை போராட்டத்தை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என சாலை மறியலை தொடர்ந்தனர். இதனையடுத்து, துணை வட்டாட்சியர் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு தெரிவிக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், "தற்போது கட்டப்படும் இந்த குடியிருப்புகளால் வனவிலங்கு அதிக பாதிப்பு ஏற்படும். இதனால், ஊருக்குள் அதிகளவில் வனவிலங்குகள் வந்து மனித-விலங்கு மோதலுக்கு வழிவகுக்கும். யானை வழித்தடம் அழிக்கப்படுவதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும். ஏற்கனவே, அதிக அளவில் யானைகள் ஊருக்குள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதன் பாதையை மறித்தால் இன்னும் நிறையப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, எனத் தெரிவித்தனர்.