கோவை : கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்க நிர்பந்திக்கும் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் மது விற்பனையாளர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை : கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்க நிர்பந்திக்கும் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் மது விற்பனையாளர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை ஸ்டேன்மோர் எஸ்டேட்டைச் சார்ந்தவர் பிரபு என்கிற தேவா. இவர் கடந்த இரண்டு வருடங்களாக கள்ளச்சந்தையில் மதுபானங்களை வால்பாறை பகுதி காவல்துறையின் அனுமதியோடு விற்பனை செய்து வந்துள்ளார். மேலும், காவல் ஆய்வாளர் முருகேசன் அனுமதியோடு வால்பாறை முழுவதும் 36 இடங்களில் கள்ளத்தனமாக மது விற்கப்படுகிறது.
இந்த நிலையில், மாதம் மாதம் லட்சக்கணக்கான ரூபாய்களை வால்பாறை போலீசார் சட்டவிரோத செயல்பாடுகளை செய்ய அனுமதி வழங்கி வசூல் செய்கின்றனர் என முன்னாள் மது விற்பனையாளர் தேவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் மது விற்பனையாளர் தேவா கூறியதாவது :- முன்னாள் மது விற்பனையாளர் ஆகிய நான் கடந்த 5 ஆம் தேதி ஒரு கடைக்கு ரூ. 10,000 வீதம் 36 கள்ள மதுபான விற்பனை கடைகளுக்கு ரூ. 3,60,000-மும், 4 லாட்டரி கடைகளுக்கு ரூ. 15,000 வீதம் ரூ. 60,000 என மொத்தம் ரூ. 4,20,000-ஐ கருணாகரன் மற்றும் ரைட்டர் காளிதாஸ் மூலம் ஆய்வாளருக்கு கொடுத்துள்ளேன். அதேபோல, ஸ்பெசல் பிரேன்ச் ஏட்டு முஜிப்பிற்கு ஒரு கள்ள மதுபான கடைக்கு ரூ. 2,000 வீதம் ரூ. 72,000மும், லாட்டரி கடை ஒன்றுக்கு ரூ 5,000 ஆயிரம் வீதம் ரூ. 20,000-மும் அதே தேதியில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரம் கள்ள மதுவிற்கு அனுமதி கொடுத்துவிட்டு பின்பு மறைத்து தான் விற்க வேண்டும் என காவல் நிலையத்தில் இருந்து கருணாகரன் மற்றும் பிரபு எஸ்.ஐ. கூறியுள்ளனர்.
இந்த நிலையில், தீடீரென எஸ்.பி., ஏட்டு முஜிப், எஸ்.ஐ. செல்லத்துரை ஸ்டேன்மோரிலுள்ள எனது கடைக்கு வந்து அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 6 பாட்டில்களை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். வால்பாறை போலீசாரை பொறுத்தவரை மதுபான பாட்டில்களை எடுத்துச் சென்றால் ரூ. 5,000 அபராதம் கட்டினால் விட்டுவிடுவார்கள். ஆனால், இந்த முறை ரூ. 60,000 பணத்தை ஆய்வாளர் முருகேசன் கேட்டார். அதேபோல, புதிதாக வந்துள்ள அதிகாரிகளுக்கும், வால்பாறையிலுள்ள பத்திரிக்கையாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் எனக் கூறி முழு பணத்தை கொடுத்தால் வழக்குப் போடாமல் விட்டு விடுவதாகவும் தெரிவித்தார். இதற்கு நான் தற்போது தானே லட்சக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்து கொடுத்தேன், மறுபடியும் கேட்டால் நான் எங்கே போவது என தெரிவித்தேன்.
இதனால், என் மீது கோபம் அடைந்த ஆய்வாளர் 23-ம் தேதியன்று காலை 7.30 என்னை காவல் நிலையத்திற்கு கூட்டி வந்து சட்டத்திற்கு புறம்பாக மது விற்றதாக கூறி வழக்குப் பதிந்தார். அப்போது, நீதிமன்றத்தில் எது கேட்டாலும் ஆம் என்று சொல், நீதிமன்ற பிணையில் வந்துவிடாலம் என என்னிடம் தெரிவித்தார். ஆனால், 16 பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்து என்னை சிறைக்கு அனுப்பி விட்டனர். சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கும் ஆய்வாளர் அவரது சுயநலத்திற்காக என்னை சிறைக்கு அனுப்பிவிட்டார்.
ஆகவே, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நான் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட போவதில்லை. ஆகவே, வால்பாறையில் நடைபெறும் இந்த செயல்களை காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக புகார் கொடுத்துள்ளேன். மேலும், வால்பாறை காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் மற்றும் உளவு பிரிவு உட்பட காவலர்கள் மீது புதிதாக வந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளேன், என தெரிவித்தார்.